×

ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் வாபஸ்: மீனவர்களை விடுவிக்க ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை: ராமநாதபுரம் ஆட்சியர் உறுதி

ராமேஸ்வரம்: 3 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் திரும்பப் பெற்றனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உறுதி அளித்த நிலையில் போராட்டம் வாபஸ் பெற்றனர்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பிடிக்கப்பட்ட படகுகளையும் மீட்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவாதம் அளித்ததை அடுத்து, மீனவர்களின் நடைபயண போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர். எனினும், திட்டமிட்டபடி கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாகவும் மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஊர்வலமாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்.4ம் தேதி பாக்ஜலசந்தி கடலுக்கு 2 படகுகளில் மீன்பிடிக்க சென்ற 23 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்களில் 20 பேர் விடுதலை செய்யப்பட்டு, படகோட்டிகள் ராபர்ட், பெக்கர், மெல்சன் ஆகியோர் இலங்கை அரசின் புதிய கடல்தொழில் மீன்பிடி சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், இருவருக்கு 6 மாதமும், ஒருவருக்கு 18 மாதமும் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மூவரும் யாழ்ப்பாணம் சிறையில் உள்ளனர்.

இவர்கள் மூவரையும் விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படையை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 17ம் தேதி மீன்வளத்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மறுநாள் படகுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக 3வது நாளான நேற்று பாம்பன், மண்டபம் மீனவர்களும் வேலை நிறுத்தம் செய்தனர். 4வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மீனவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து 60 கி.மீ தூரமுள்ள ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க இன்று காலை ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை டோக்கன் அலுவலகம் முன்பு துவங்கிய ஊர்வலத்திற்கு மீனவர் சங்க பிரதிநிதி சகாயம் தலைமை வகித்தார். இதில், ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பாம்பன், மண்டபம், தொண்டி, மூக்கையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். பேரணியில் சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படை, இலங்கை அரசு மற்றும் ஒன்றிய அரசைக் கண்டித்து கோஷமிட்டபடி சென்றனர். மீனவர்களின் ஊர்வலத்தால் ராமேஸ்வரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உறுதி அளித்த நிலையில் போராட்டம் வாபஸ் பெற்றனர். எனினும், திட்டமிட்டபடி கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாகவும் மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

The post ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் வாபஸ்: மீனவர்களை விடுவிக்க ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை: ராமநாதபுரம் ஆட்சியர் உறுதி appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Ramanathapuram Collector ,Vishnu Chandran ,Sri Lankan Navy ,
× RELATED கடல் நீர்த்தேக்கத்தில் தடுப்புவேலி அமைத்து மீன் பிடிப்பு